search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பாதுகாப்பு"

    • அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும்.
    • தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    சிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. குடும்பச் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகைகள் அணிந்து இருந்தால்தான் சமுதாயத்தில் மதிப்பு என்று கருதி, சில பெண்கள் அவற்றுக்காக அதிகமாக செலவு செய்வார்கள்.

    பெண்களின் திறமை, அவர்களின் பேச்சு, பண்பான அணுகுமுறை போன்றவற்றால் தான் சமுதாயத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். கால மாற்றத்தால் அழகு நிலையங்கள் பெண்களின் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அழகு பராமரிப்புக்காக அதிகமாக செலவு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். அவற்றை தவிர்த்து இயல்பான அழகுக்கு தேவையான பராமரிப்புகளை மட்டும் செய்துகொள்ளலாம்.

    கணவனும்-மனைவியும் பணிக்குச் செல்லும் பல குடும்பங்களில், சமையலில் சிக்கனம் தவறிப்போகும். நேரம் இல்லாத காரணத்தால், மாதத்தில் பல நாட்கள் வெளியில் வாங்கி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். விலை உயர்ந்த காய்கறிகள், சமையல் பொருட்கள் தான் உடலுக்கு நல்லது என நினைத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்குவார்கள். அவற்றை விட நமக்கு அருகில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் பல மடங்கு சத்து கொண்டதோடு, விலையும் குறைவாக இருக்கும்.

    வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு தகுந்தபடி சிக்கனமாக உணவு தயாரிப்பது அவசியம். அளவுக்கு அதிகமாக சமைத்து உணவை குப்பையில் கொட்டுவது தவறாகும். சிக்கனத்தை கடைப்பிடிக்கத் தவறினால், பணப்பிரச்சினைகள் உருவாகி, மனப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகள் கேட்டதை எல்லாம் உடனே வாங்கி கொடுப்பது தவறு. சிக்கனமாக இருப்பதை குழந்தைகள் உணரும்படி பக்குவமாக எடுத்துச் சொல்வது பெற்றோரின் கடமையாகும்.

    தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிது புதிதாக விற்பனைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது சிக்கனத்தின் அடிப்படையாகும். சிக்கனம் வேறு, கஞ்சத்தனம் வேறு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கனம் சீரான வாழ்க்கைக்கு உதவும். கஞ்சத்தனம் யாரும் மதிக்காத நிலையை உண்டாக்கும். இதை உணர்ந்து தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்.

    • ரெயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம்.
    • பயணத்தின் போது அணியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    ரெயில் பயணம் பலருக்கும் பிடித்தமான விஷயம். தற்போது பல்வேறு காரணங்களால், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் ரெயிலில் தனியாக பயணிக்கிறார்கள். அப்போது தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வது நல்லது. அதற்கான ஆலோசனைகள் இங்கே…

    ரெயில் பயணத்துக்காக டிக்கெட் பதிவு செய்யும்போதே பெண்களுக்கான தனி இருக்கைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு முடியாத சூழலில் பயணம் செய்ய நேரிட்டாலும் முடிந்த அளவிற்கு பெண்கள் இருக்கைகள் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள். இரவு பயணங்களில் 'ஸ்லீப்பர்' முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், டிக்கெட் பதிவில் கூடுமானவரை 'அப்பர்பர்த்' எனப்படும் மேலே இருக்கும் படுக்கையைத் தேர்வு செய்வது நல்லது.

    இது பெண்களுக்கு பல வகைகளில் வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். தனியாக பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எந்தவித தயக்கமும் இல்லாமல் டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயிலில் ரோந்து வரும் போலீசாரிடம் தெரிவியுங்கள். பயணத்தின்போது உங்களுக்குத் தேவையான தின்பண்டங்கள், தண்ணீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில், பலருக்கு ரெயிலில் வாங்கி சாப்பிடும் உணவு அசவுகரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

    இரவு நேர பயணத்தின்போது சால்வை, சார்ஜர், சானிட்டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். ரெயில் பயணம் மட்டுமில்லாமல், எந்தப் பயணமாக இருந்தாலும் விலை உயர்ந்த நகைகள், அதிக பணம் வைத்திருப்பதைத் தவிருங்கள். மற்றவர்கள் முன்பு உங்கள் பையை அடிக்கடி திறந்து மூடுவதைத் தவிர்ப்பது நல்லது.

    ரெயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதைத் தவிர்க்கலாம். அவ்வாறு பேச வேண்டிய தேவை வந்தாலும், உங்களைப் பற்றிய தகவல்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செல்போனில் பேசும் போதும் கவனம் தேவை. ரெயிலில் பயணம் செய்ய தேவையான முகவரி சான்றுகளை கைவசம் வைத்திருக்கிறீர்களா என்பதை கிளம்பும் போதே கவனித்துக் கொள்ளுங்கள்.

    இல்லை என்றாலும் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்து முறையான நடவடிக்கைக்கு உட்படுங்கள். அதைத் தவிர்த்து, அந்த நேரத்தில் வேறு வழிகளை நாடுவது உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம். பயணத்தின் போது அணியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். பிறர் கண்களுக்கு உறுத்தாத வகையில், உங்களுக்கு வசதியான ஆடைகளை அணிவது முக்கியம்.

    • உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது.
    • உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.

    ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும்.

    சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

    ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

    மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை.

    அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம். தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம். வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும். உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    • அதிக வேலைச்சுமை, பணிப்பெண்களின் உடல்நலத்தை பாதிக்கக்கூடும்.
    • சிறப்பாக செயல்படும்போது மனதார பாராட்டுங்கள்.

    குடும்ப சூழ்நிலையின் காரணமாக வீட்டு வேலைக்கு வரும் பெண்களை மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்துவது முக்கியம். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது மனதார பாராட்டுங்கள். பணிப்பெண்களை மரியாதையோடு அழைக்கவும், நடத்தவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். கண்டிப்பது அல்லது குறை கூறுவதற்குப் பதிலாக சில தெளிவான விதிகளை முன்னரே அமைத்துக்கொள்ளுங்கள்.

    அதற்கேற்ப நடந்துகொள்ள அவர்களை அறிவுறுத்துங்கள். வேலையில் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதை திருத்தி அமைப்பதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள். அவர்கள் பணியில் தவறுகள் செய்யும்போது அதைப்பற்றி நிதானமாகவும், உறுதியாகவும் அவர்களிடம் பேசுங்கள். அதேசமயம் உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களுக்கும் உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

    அத்தகைய நேரங்களில் அவர்களிடம் கருணை காட்டுவதற்கு தயங்காதீர்கள். உங்களுடைய வீட்டு வேலைகளின் சுமையைக் குறைப்பதற்காகத்தான் நீங்கள் பணிப்பெண்களை நியமிக்கிறீர்கள். அதேசமயம், அனைத்து வேலைகளையும் அவர்களிடம் குவிப்பதும் நியாயமானதாக இருக்காது.

    அதிக வேலைச்சுமை, பணிப்பெண்களின் உடல்நலத்தை பாதிக்கக்கூடும். அதனால் அவர்கள் வேலையை விட்டு விலகும் வாய்ப்புகள் உள்ளன. பணிகளுக்கு இடையே அவர்கள் சற்று ஓய்வெடுப்பதற்கும் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.

    • பெண்கள் பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.
    • முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள்.

    கண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

    எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய அளவு மண் அகல் - 1

    சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

    பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பருப்பு - 1 சிறிய

    அகலமான கண்ணாடி குப்பி - 1

    டீஸ்பூன் - 1

    செய்முறை: சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள். விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

    பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும்.

    அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்

    • கடந்த 13-ந்தேதி முதல் இந்த பைக் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • பெண்களுக்கான பெண்கள் பைக் டாக்சி இயக்குவது நல்ல விஷயம்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கொண்டு வரப்பட்டதுதான், மெட்ரோ ரெயில் சேவை.

    சென்னையின் பிரதான போக்குவரத்து பயணங்களில் ஒன்றாக இந்த ரெயில் சேவை தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் செய்து வந்த நிலையில், தற்போது, 2½ லட்சம் பேர் தினமும் பயணிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மேலும் சில வழித்தடங்களிலும் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டுவருவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அனைத்து முழுமையாக நிறைவு பெற்றதும், சென்னையில் மெட்ரோ ரெயில், போக்குவரத்து சேவைகளில் முக்கிய இடத்தை பிடித்துவிடும். சொகுசு பயணம், குறைந்த நேரத்தில் பயணம் என பல்வேறு அம்சங்களை கொண்டதால், பலரும் இதனை விரும்புகிறார்கள்.

    பைக் டாக்சி

    இப்படிப்பட்ட பயண அனுபவத்தை கொடுக்கும் மெட்ரோ ரெயில் நிர்வாகம், பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக தற்போது 'ரேபிடோ' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய 'பைக் டாக்சி' முறையை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறது.

    அமோக வரவேற்பு

    பெண் பயணிகளுக்காக, பெண்களால் இயக்கப்படும் இந்த 'பைக் டாக்சி' முதற்கட்டமாக சென்னை நந்தனம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ரெயில் நிலையங்களில் இருந்து வெளியே வரும் பெண் பயணிகள், குறிப்பிட்ட இடங்களுக்கு பயணிக்க இந்த பைக் டாக்சியை அதற்கான செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இதற்காக இந்த ரெயில்நிலையங்களில் விழிப்புணர்வும் செய்யப்பட்டு வருகிறது.

    மெட்ரோ நிர்வாகத்தின் இந்த முயற்சிக்காக ரேபிடோ நிறுவனம், பிரத்யேகமாக பெண் 'பைக் டாக்சி' டிரைவர்களை நியமித்து இருக்கிறது. இவர்களை 'கேப்டன்' என்று அழைக்கின்றனர். கடந்த 13-ந்தேதி முதல் இந்த பைக் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில நாட்களாக இதில் பெண்கள் பலர் பயன்படுத்துவதாகவும், அமோக வரவேற்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் 'பைக் டாக்சி' அழைப்புகள் வருவதாகவும், அதனை முறையாக 'பிக்' செய்து பெண் கேப்டன்கள், பெண் பயணிகளை பத்திரமாக அழைத்து செல்கின்றனர்.

    நல்ல விஷயம்

    இதுகுறித்து வேளச்சேரியை சேர்ந்த தமிழரசி கூறுகையில், 'பெண்களுக்கான பெண்கள் பைக் டாக்சி இயக்குவது நல்ல விஷயம். தற்போது பரபரப்பாக இயங்கும் உலகில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் பெண் பயணிகளுக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்திருக்கும் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டத்தக்க ஒன்று. பைக் டாக்சியை பெண்கள் இயக்குவதால், எங்களுக்கும் சவுகரியமாக இருக்கிறது. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறோம் என்ற நிம்மதியும் ஏற்படுகிறது. அதேசமயம் செயலியில் புக்கிங் செய்யும்போது, பெண் ஓட்டுனர் வேண்டும் என்று கேட்கும் வகையில் ஒரு ஆப்ஷன் வழங்கினால் நன்றாக இருக்கும்' என்றார்.

    பைக் டாக்சி டிரைவர் கிருஷ்ணவேணி கூறும்போது, 'நான் இதற்கு முன்பு பைக் மூலம் உணவு டெலிவரி செய்யும் பணியை செய்து கொண்டிருந்தேன். இப்போது பைக் டாக்சி மூலம் வருவாய் ஈட்டி வருகிறேன். அதிலும் பெண்களுக்காக, பெண்களே இயக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று. ஆண் பயணிகள் வந்தாலும் நாங்கள் மறுக்காமல் ஏற்றி செல்கிறோம். இந்த வருவாய் எங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறது. ஒரு சேவை செய்யும் உணர்வும் வருகிறது' என்றார்.

    பயனுள்ளதாக இருக்கிறது

    பைக் டாக்சி டிரைவர் சித்ரா கூறும்போது, 'நான் ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றினேன். அதில் எப்போதாவது தான் வருவாய் கிடைத்து வந்தது. அதன் பிறகுதான், இந்த வேலையில் களம் இறங்கினேன். நாளொன்றுக்கு ரூ.1,000 வருவாய் கிடைக்கிறது. இதில் புக் செய்யும் போது பெண் டிரைவர்கள் என்று வந்ததும், ஆண்கள் பலர் புக்கிங்கை கேன்சல் செய்துவிடுகிறார்கள். மெட்ரோ ரெயில் நிர்வாகம் இப்போது எங்கள் நிறுவனத்துடன் இணைந்து செய்திருக்கும் இந்த முயற்சி எங்களுக்கு வரப்பிரசாதம். இதன் மூலம் புக் செய்து பயணிக்கும் பெண் பயணிகளும் இதை வரவேற்கிறார்கள். நல்ல திட்டம் என்று சொல்கிறார்கள்' என்றார்.

    கோடம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரம்யா கூறுகையில், 'குறுகிய நேரம், சொகுசான பயணத்துக்காக தான் மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறோம். இப்போது கூடுதலாக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து நாம் சேர வேண்டிய இடத்துக்கு பாதுகாப்பான பயணத்தை தரக்கூடிய வகையில் நல்ல முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார்கள். நிச்சயம் அனைத்து தரப்பு பெண்களாலும் பாராட்டப்படக்கூடிய விஷயமாக இது இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பஸ், ஆட்டோ பிடித்து அலுவலகத்துக்கு செல்வதற்கு பதிலாக குறைந்த செலவில், விரைந்து செல்வதற்கு இந்த பைக் டாக்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது' என்றார்.

    விரைவில் மற்ற ரெயில் நிலையங்களில்...

    இதுதொடர்பாக பைக் டாக்சி நிறுவனத்தின் நிர்வாகி விக்னேஷ் கூறும்போது, 'மெட்ரோ ரெயிலில் பயணித்து வெளியில் வரும் பயணிகள், குறிப்பிட்ட இடத்துக்கு செல்வதற்கு இந்த பைக் டாக்சியை பயன்படுத்தலாம். விலையும் குறைவு, பாதுகாப்பான சேவையை வழங்குகிறோம். பெண் பயணிகளுக்காக பெண் டிரைவர்களை கொண்ட பைக் டாக்சியை அறிமுகம் செய்துள்ளோம். ஒருவேளை புக்கிங் செய்து பெண் டிரைவர்கள் வரவில்லை என்றால், அதை ரத்து செய்துவிட்டும், மீண்டும் புக் செய்யும் வசதியும் உள்ளது. முதற்கட்டமாக 6 ரெயில் நிலையங்களில் இதை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். விரைவில் மற்ற ரெயில் நிலையங்களிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்' என்றார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.
    • நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

    கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்புபவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது. இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.

    இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும். நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

    சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள்.

    பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது.
    • சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும்.

    காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

    வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

    பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

    பாலியல் குற்றங்கள்

    இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பள்ளி, கல்லூரிகளில்

    சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:-

    சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

    பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லி பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

    தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:-

    உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

    பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

    கல்லூரி மாணவி ரித்திகா ரமேஷ்:-

    12-ம் வகுப்பு படிக்கும் போது நானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் வெளியில் சொல்ல முடியாத நிறைய கதைகள் இருக்கின்றன. பெண் வெளியில் வந்து சொல்லும் போது அவர்களை மரியாதைக்குரியவர்களாக நடத்த வேண்டும். பாலியல் கல்வி கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. பெண் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதை காட்டிலும் ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வளரும் போதே சொல்லி வளர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு தவறு செய்தவர்களுக்கு தண்டனை விரைந்து வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து வெளியில் வர முடியாது என்ற பயம் தவறு செய்தவர்களுக்கு வரும்.

    கல்வியாளர் கல்யாணந்தி:-

    கோடை விடுமுறையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவிட முடியும். இந்த நேரத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் அவர்களிடம் செக்ஸ் கல்வி குறித்து பேசலாம். வெளியே செல்லும் நேரங்களில் யாராவது தவறாக நடந்துகொண்டால் உடனே என்னிடம் சொல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு உடன் இருப்போம் என்று தைரியம் சொல்ல வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த ஓரிரு நாட்களில் அவர்களிடம் சிறிய மாறுதல்கள் இருக்கும். அப்போது அவர்களிடம் உட்கார்ந்து பேச வேண்டும். பெற்றோர்கள் புகார் தெரிவிக்க முன்வரும் போதுதான் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும். விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக தான் குற்றங்கள் குறையும்.

    • திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
    • மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

    டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், சமூக வலைத்தளங்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமல்ல, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.

    இதுபற்றிய ஆய்வு நடத்திய மார்ட்டீன் கூறுகையில்... ''சமூக வலைத்தளங்களில், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் அதிகமாக பகிர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை வெளிகாட்டிக்கொள்ள இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின்போது எடுக்கப்பட்ட படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? 'இல்லை' என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

    காதலர்கள் இப்படி தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

    மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றி சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லையாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் வெளி உலகுக்கு தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்'' என்று கூறினார்.

    மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.

    • சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை.
    • ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.

    பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

    சுயதொழில்

    படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.

    பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    அதிக லாபம்

    ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊருகாய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.

    தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    மாவு வியாபாரம்

    இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

    மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம்.

    வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலேயே உங்கள் பிசினஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''.

    • கணவர் மீதான பயமும் பெண்கள் பொய் பேச காரணமாக இருக்கிறது.
    • கணவர் மீதான வெறுப்பாலும் உண்மையை மறைத்து பொய் பேசுகிறார்கள்.

    பொய் சொல்வது மனித இயல்பு. இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. ஆனால் பிரச்சினைகளில் சிக்காமல் இருப்பதற்கு போகிற போக்கில் ஒரு பொய்யை சொல்லிவிட்டுப்போகலாம். அந்த பொய்யால் அடுத்தவர்களுக்கு பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டும். அதே நேரத்தில் தவறுகளை மறைப்பதற்கும், அப்பாவிகளை சிக்கவைப்பதற்கும்தான் பொய் பேசக்கூடாது!

    சரி விஷயத்திற்கு வருவோம். 'பெண்கள் எந்த அளவுக்கு பொய் சொல்வார்கள்?' என்ற ஆராய்ச்சியில் இங்கிலாந்தை சேர்ந்த மனோதத்துவ ஆய்வாளர் மேரி கோல்டு இறங்கினார். அவரது கண்டுபிடிப்பு ருசிகரமானது. தொடர்ந்து படியுங்கள்!

    "திருமணமான பெண்கள் கணவரது மனநிலையை அறிந்துகொண்டு அதற்கு தக்கபடி அவ்வப்போது பொய்களை அவிழ்த்துவிடுகிறார்கள். அவர்கள் குறைந்தது தினமும் இரண்டு பொய் களாவது சொல்கிறார்கள். பொய் சொல்லாத பெண்கள் இருக்கிறார்களா? என்று தேடிப்பிடித்தாலும், அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது கடினம். கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே கணவர்களிடம் ஜாலியான மனநிலையில் ஏதாவது ஒரு பொய்யாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பெண்கள் எதற்காக பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் ஆராய்ச்சி செய்தேன். அவர்களது அன்றாட செயல்பாடுகளில் ஏதாவது தவறு நடந்துவிடுகிறது. அது மிக சாதாரணமான விஷயமாக இருக்கும். அதில்கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவதை பல பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

    கணவர் மீதான பயமும் பெண்கள் பொய் பேச காரணமாக இருக்கிறது. தான் உண்மையை சொல்லிவிட்டால், தன்னை கணவர் குற்றஞ்சாட்டுவார் அல்லது தண்டனை வழங்கிவிடுவார் என்று பயந்தும் பெண்கள் பொய் சொல்கிறார்கள். இன்னொரு வகையினர் கணவர் மீதான வெறுப்பாலும் உண்மையை மறைத்து பொய் பேசுகிறார்கள். 'கணவரிடம் நாம் உண்மையை பேசி அவருக்கு விசுவாசமாக இருக்கவேண்டியதில்லை' என்று கருதியும் சில பெண்கள், கணவரிடம் பொய் பேசுகிறார்கள்.

    இதில் கவலைக்குரிய ஒருவகை பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் வஞ்சகமும், சூதும் கலந்து பொய் சொல்வார்கள். இவர்களால்தான் குடும்பத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் உருவாகிவிடும். அப்படிப்பட்டவர்களிடம்தான் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்" என்று ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

    சின்னச் சின்ன விஷயங்களில் அவர்கள் எப்படி பொய் சொல்வார்கள் என்பதையும் ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்!

    "பெண்கள் காய்கறி வெட்டும்போது கையில் கத்தி லேசாக கீறி யிருக்கும். அதை பற்றி கணவர் கேட்டால், அவரை கவலைப்படுத்தும் விதத்தில் காயத்தை பற்றி பெரிதாக விளக்கமளிப்பார்கள். சில நேரங்களில் அதிகபட்ச காயத்தைகூட 'அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க.. கையில் லேசான சிறாய்ப்புதான்' என்றும் சொல்வார்கள்.

    கணவர் வரவு செலவு கணக்கு கேட்டு அழுத்தம் கொடுத்தால், அப்போது அமைதியாக இருந்துவிட்டு சிறிது நேரம் கழித்து அவரிடம் பொய் கலாய்க்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதாவது மனைவியின் ஆடம்பர செலவு பற்றி கடிந்துகொள்ளும் கணவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் 'என் கறுப்பு கலர் பேண்ட்டை காணவில்லையே.. எங்கே?' என்று கேட்டால், 'அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது' என்று மழுப்பலான பொய்யைச் சொல்வார்கள். ஆனால் அந்தச் சட்டையை அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்" என்று சொல்லும் ஆராய்ச்சியாளர், இதில் முத்தாய்ப்பாக சொல்லும் விஷயம்தான் ரொம்ப கவனிக்கத்தகுந்தது.

    "பெண்கள், தங்கள் குடும்ப மகிழ்ச்சிக்காகவும், கணவன்- மனைவி உறவை வலுப்படுத்துவதற்காகவுமே நிறைய பொய்களை சொல்கிறார்கள். அதனால் திருமணமான பெண்கள் சொல்லும் பொய்களால் பெரும்பாலும் குடும்பத்திற்கு பாதிப்பு வருவதில்லை" என்கிறார். இது எப்படி இருக்கு?!

    • மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
    • சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை.

    மனித வாழ்க்கையானது இளமைப்பருவம், முதுமைப்பருவம் என இருப்பருவங்களாக வகுக்கப்படுகின்றன. அதில் ஆணும் சரி, பெண்ணும் சரி வாழ்வின் பெரும்பகுதியினை இல்லற வாழ்க்கைக்கே செலவு செய்கின்றனர். துணைவியாக வரும் பெண் தன் துணைவனை பெற்றுக்கொள்ள குறிப்பிட்டதொரு பகுதி செல்வத்தை கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நாம் வரதட்சணை என்கிறோம்.

    வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளை குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. திருமணம் என்பது இரு மனங்கள் சேர்ந்து வாழ வேண்டும். இதனை வியாபாரத்தின் நோக்கில் கொண்டு சென்று வரதட்சணை என்னும் பெயரில் பல கொடுமைகள் அரங்கேறுகின்றன.

    மாப்பிள்ளை வீட்டார்கள் விலைபேசி மங்கையை மணம் முடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல ஏழை எளிய பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வரதட்சணை கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், பிறந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    குடும்பத்தில் அன்றாட நடக்கும் வன்முறையின் ஒரு பிரதான அடிப்படை வரதட்சணை. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண், வரதட்சணையின் காரணமாக மரணமடைகிறாள். தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணை குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பல சட்டம் பேசும் சமுதாயத்துடன் இணைந்து வாழ பெண்கள் முடிவெடுத்தாலும் சில ஆண்கள் ஆதிக்க வெறியினால் சமுதாயத்தில் பெண்கள் அடையும் இன்னல்களுக்கு அளவில்லை. பெண்கள் வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் தங்கள் தோளில் சுமந்துகொண்டு நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகிறாள். ஒவ்வொரு நிமிடமும் இவர்கள் செய்யும் பணிகள் ஏராளம். பெண்கள் தங்களது வாழ்வில் தனக்கென இல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள்.

    பெண் சிசுக்கொலைகள் அதிக அளவில் நடைபெறுவதற்கு வரதட்சணை கொடுமையே முக்கிய காரணமாக உள்ளது. பெண் குழந்தை பிறந்து ஆளானால் பல்லாயிரக்கணக்கான சீர் வரிசைகளுடன் கணவன் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயக் கடமை பெற்றோருக்கு இருக்கின்றது. பிற்காலத்தில் தங்கள் மகளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்ற அச்சத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பிறந்தவுடனேயே பெண் குழந்தைகளை கொன்று விடுகிறார்கள். இவ்வாறு ஈவு இரக்கமின்றிய செயல்களுக்கு வித்திடுவதாய் வரதட்சணை கொடுமை அமைந்துள்ளது.

    வரதட்சணை கொடுத்து மாப்பிள்ளைகளை மணமுடிக்க முடிந்தாலும் பல பெண்கள் ஆண்களுக்கு உரிமையுடன் வாழ முடியவில்லை. வீட்டில் கொத்தடிமையாகவே நடத்தப்படுகிறார்கள். கூலியின்றி வாழ்நாள் முழுவதும் வேலை செய்யும் ஒரு பெண்ணாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களின் இந்த நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வேதனைக்குரியது.

    சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கிய கொடுமை, வரதட்சணை மற்றும் ஏழ்மையை கருத்தில் கொண்டு இளம் பெண்கள் வயது முதிர்ந்த பல ஆண்களுக்கு மனைவியாகவும் மற்றும் இரண்டாம் தாரமாகவும் வாழ்க்கையை நடத்தும் கொடுமைகள் உருவாகின்றன. வரதட்சணை கொடுமை சமுதாயத்தில் பெரும் ஆலமரவேர் போல பரவி பல்வேறுபட்ட தீமைகளுக்கு புகலிடமாக இருந்து வருகின்றது. இதற்கு காரண கர்த்தாவாக இருக்கும் சமுதாயமே இக்கொடுமைகளை போக்க வேண்டும்.

    'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்றும், 'தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை' என்றும் பெண்ணாகிய தாயை போற்றும் சமுதாயம் ஒரு விஷமுடைய காயையும் விட கேவலமாக பெண்களை நடத்துகின்றது. இது மாற்றமடைய வேண்டும். சமுதாயத்தில் உள்ள ஆண்கள், பெண்களை மதிக்கவும், ஒரு நல்ல தோழனாகவும், உறுதுணையாகவும் இருக்க வேண்டுமே தவிர அவர்களுக்கு துயரம் கொடுக்கக்கூடாது. ஒரு நல்ல ஆண்மகனின் அடையாளம் பெண்மையை கலங்காது இறுதிவரை பாதுகாப்பதே.

    வரதட்சணை கொடுமையை அகற்றுவோம்!

    பெண்களை மதிப்போம்!

    சமுதாயத்தை உயர்த்துவோம்!

    ×